புதுடெல்லி: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தாத மாநில தேர்தல் ஆணையம், தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வழக்கறிஞர் ஜெய்சுகின் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்துள்ளார். தேர்தல் தேதியை அறிவிக்காமல் மேலும் அவகாசம் கேட்டதை அடுத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் கவுன்சிலர், நகராட்சித் தலைவர் உள்ளிட்ட 1 லட்சத்து 30 ஆயிரம் பதவியிடங்கள் காலியாக இருக்கின்றன. இந்த பதவிகளுக்காக கடந்த 2016ம் ஆண்டு அக்டோபர் 17 மற்றும் 19ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் அதையடுத்து பல்வேறு காரணங்களை கூறி தற்போது வரை மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தலை தொடர்ந்து ஒத்திவைத்து வருகிறது. இதில் தமிழக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக திமுக தரப்பில் ஆர்எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கு மட்டும் உச்ச நீதிமன்றத்தில் தற்போது வரை நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என வழக்கறிஞர் ஜெய் சுகின் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு மனு தாக்கல் செய்திருந்தார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பான அறிவிப்பாணையை அக்டோபர் இறுதி வாரத்திற்குள் கட்டாயம் வெளியிட்டு அதற்கான தேதியை வெளியிட வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்திற்கு கடந்த ஜூலை 17ம் தேதி உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து இந்த மாதம் இறுதிக்குள் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஏதாவது அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று ஒரு புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில்,” தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வார்டு வரையறை முடிந்து விட்டது. இதில் மின்னணு வாக்கு இயந்திரங்கள் அரியானா மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு தற்போது தேர்தலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அது எப்போது திரும்பி வரும் என தெரியாது. அதனால் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக கூடுதலாக மேலும் 4 வாரம் அவகாசம் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த வழக்கை 4ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் 4 வாரம் அவகாசம் வழங்க வேண்டும் என கேட்ட மாநில தேர்தல் ஆணையம் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தாத மாநில தேர்தல் ஆணையம், தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு