மீம்ஸ் போடுகிற மாம்ஸ்கள் ஜாலியாக இருக்கட்டும் - நித்யானந்தா ஜாலி பேச்சு

நித்யானந்தா நேற்று சமூக வலைதளத்தில் தோன்றி சொற்பொழிவாற்றினார். அவர் பேசியதாவது:-

2003-ம் ஆண்டு முதல் நான் சந்திக்காத குற்றப்பிரிவுகளே இல்லை. என் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளிலும் நான் நிரபராதி என நிரூபித்துள்னேன். ஆன்மீகத்துறையில் நான் என்றைக்கோ தலைவனாகிவிட்டேன்.

என்னைப் பற்றி வரும் மீம்ஸ்களால் வருத்தம் அடையவில்லை. மீம்ஸ் போடுகிற மாம்ஸ்கள் ஜாலியாக இருக்கட்டும். நானும் ஜாலியாக இருக்கிறேன்.

முன்பெல்லாம் நாட்டில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால்தான் அதனை திசை திருப்ப என்னை பற்றிய செய்திகள் உலாவும். தற்போது ஏதாவது பெரிய பிரச்சினை வரும்போது தவிர்த்து மற்ற நேரங்களில் எல்லாம் முழு நேரமும் என்னைப் பற்றித்தான் ஊடகங்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான் என்கிற காமெடியைப் போல எனது நிலை ஆகிவிட்டது.

கைலாசா நாடு அமைக்கும் திட்டத்தால் எனக்கு அடிதான் விழும் என்று நினைத்தேன். ஆனால் அதற்கு மாறாக ஆதரவு பெருகி வருகிறது.

கைலாசா நாட்டில் குடியுரிமை கேட்டு உலகம் முழுவதும் இருந்து 40 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். கைலாசாவை அமைத்தே தீருவேன். இதில் எந்த சமரசமும் கிடையாது. செய்ய முடியுமா? முடியாதா? என்ற பஞ்சாயத்து வந்தால் இப்போதே சொல்லி விட்டேன். அந்த கடவுளின் அருளால் நான் செய்ய வேண்டிய திருப்பணியாக திருகைலாசத்தை அமைத்தே தீருவேன்.

இவ்வாறு அவர் பேசினார்.